திருச்சி, அக்.11: பதவி உயர்வுகோரி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெல் வெல்டிங் தொழிலாளர்கள் 14 பேரை இடமாற்றம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி பெல் நிறுவனத்தில் 7ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பாய்லர்களில் வெல்டிங் பிரிவின் பங்கு முக்கியமானது. வெல்டிங் பிரிவில் மட்டும் 970 பேர் பணியாற்றுகின்றனர். பிற பிாிவு தொழிலாளர்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், வெல்டிங் தொழிலாளர்களுக்கு மட்டும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. சில ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இந்நிலையில் தங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வெல்டிங் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வெல்டிங் தொழிலாளர்கள் வலியுறுத்தி கடந்த மாதம் 28ம் தேதி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர். தொழிற்சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.