விளைச்சலை பெருக்க விதைகளே ஆதாரம்

ஆலங்குடி, அக்.11: விளைச்சலை பெருக்க விதைகளே ஆதாரம் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கூறினார்.

ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் ராமசாமி தலைமை வகித்தார். தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மணிவண்ணன் வரவேற்றார். துணை வேந்தர் ராமசாமி பேசுகையில், வளர்ந்து வரும் மக்கள் தொகை காரணமாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை பெருக்குவதோடு உழவர்களின் வருமானத்தை ரட்டிப்பாக்க வேண்டியது மிகவும் அவசியம். விளைச்சலை பெருக்க விதைகளே ஆதாரமாக உள்ளன. தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் 15 - 20 சதவீத கூடுதல் விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது.

நல் விதையின் முக்கியத்துவம் காரணமாகத்தான், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 40 விதை உற்பத்தி மையங்கள் மூலமாக நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி, தீவனப் பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்களின் விதை உற்பத்தியை விதை மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறோம். பல்கலைக் கழகத்தில் மூலமாக வெளியிடப்படும் அல்லது உயர் விளைச்சல் ரகங்களின் விதைகளை, விதை மைய இயக்குனரின் பரிந்துரைக்கேற்ப அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம். வேளாண் பெருமக்களுக்கு, தரமான விதைகளை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்து அதன் மூலம் உணவு உற்பத்தியை பெருக்குவதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களின் சந்தை விலை நிலவரம் பற்றியும், சந்தை வாய்ப்பு பற்றியும் முன் கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம். வேளாண்மை பொருட்களின் விலை நிலவரத்தை, இலவசமாக அலைபேசி வழியாகவே,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக சந்தை வேளாண் நுண்ணறிவு பிரிவு மூலமாக பெற முடியும்.  இதற்கு விவசாயிகள் தங்கள் அலைபேசி எண்கள் பதிவு செய்தால் போதுமானது என்று பேசினார். இதனைத்தொடர்ந்து, நம்பிக்கை விதைகள் என்ற குறுந்தகடு வெளியிடப்பட்டது.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் வேளாண்மைப் பிரச்சனைகள், நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வழி முறைகள், சந்தை நிலவரம், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள் தயாரித்தல் குறித்த பயிற்சி, காளாண் வளர்ப்பு வேளாண்மை சார்பு தொழில்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு

விளக்கமளிக்கப்பட்டது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர்  ரவி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்க இயக்கக இயக்குனர் கணேசமூர்த்தி, ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் பாண்டியன், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் முனைவர் லதா நன்றி கூறினார்.

Related Stories: