பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர், வக்கீல்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி திறப்பு

பெரம்பலூர், அக். 11:  பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர், வக்கீல், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனுதாரர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் வசதிக்காக இலவச தொடுதிரை கணினி வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புற தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடுதிரை கணினி வசதியை இலவசமாக பயன்படுத்தி வழக்கு விஷயமாக நீதிமன்றங்களுக்கு வருகை தரும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள், சாட்சிகள், பொதுமக்கள், தாங்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளின் நிலைமை, வாய்தா தேதி, எதிர்தரப்பு வழக்கறிஞர் போன்ற தகவல்களை தொடுதிரையில் வழக்கு எண், வழக்காடி பெயர், நீதிமன்றம் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து இலவசமாக அறிந்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், மாவட்ட மகிளா நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,

நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் மகிளா நீதிமன்றம், நில அபகரிப்பு நீதிமன்றம் ஆகிய 8 நீதிமன்றங்கள் உள்ளடங்கியுள்ளன. இவைகளின் அன்றாட பணிகள் பதிவேற்றம் செய்யப்படும் இந்த தொடுதிரை கணினி வசதி திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரான சார்பு நீதிபதி வினோதா, கூடுதல் மகிளா நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனப்பிரியா, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி முன்னிலை வகித்தனர். தொடுதிரை கணினி வசதியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார். வழக்கறிஞர் சங்க தலைவர்கள் வள்ளுவன்நம்பி, முகமது இலியாஸ், மூத்த வக்கீல்கள் பிரசன்னம், சுந்தர்ராஜன், ராஜேந்திரன், பாபு, காமராசு, செந்தில்நாதன், நீதிமன்ற மேலாளர் தனலட்சுமி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நேர்முக உதவியாளர் விஜயகுமாரி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, கணினி அலுவலர் ஏசுபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: