பஸ் மோதி தொழிலாளி பலி

ஈரோடு, அக்.5:  ஈரோடு கருங்கல்பாளையம் பொன்னுசாமி வீதியை சேர்ந்த குணசேகரனின் மகன் சண்முகம்(31). இவர் ஈரோடு பகுதியில் இயங்கும் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, ஈரோடு மூலப்பட்டறை அடுத்த கேஎன்கே ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

 அப்போது சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. ஈரோடு திருநகர் காலனி அருகே வந்தபோது அரசு பஸ்சும், இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது.

 இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சண்முகத்தை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுக அரசை கண்டித்து பவானியில் திமுக கூட்டம்

பவானி, அக்.5:  அதிமுக அரசை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர திமுக  சார்பில் நேற்று முன்தினம் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 பவானி  பாவாடி திடலில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு நகர செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில மாணவரணித் துணை செயலாளர் ரங்கசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சேகர்,   மாவட்டத் துணைச் செயலாளர் அறிவானந்தம், அந்தியூர் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட  நெசவாளர் அணி அமைப்பாளர் கே.சரவணன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர்  சோபியா சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாநில அரசுகளை கண்டித்து தலைமை தேர்தல் பணிக்குழு  செயலாளர் கடலூர் புகழேந்தி சிறப்புரையாற்றினார். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக  செயலாளர் நல்லசிவம், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜா  ஆகியோர் அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து பேசினர்.

Related Stories: