ஈரோடு, அக்.5: ஈரோடு மாவட்டத்தில் உளவு பிரிவில் சரிவர பணியை செய்யாமல், முறையான தகவல் தெரிவிக்காமல் இருந்த போலீசாரை எஸ்பி சக்தி கணேசன் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தார். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் ஆகிய சப்-டிவிசன்கள் உள்ளன. இதில் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட 35 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனா். இதில் எஸ்பியின் உளவு பிரிவு போலீசார்கள் (தனிப்பிரிவு) என சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். உளவு பிரிவு போலீசார்கள், ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பாகவோ அல்லது நடந்ததற்கு பிறகு உடனே எஸ்பிக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவர்களது பணி. மேலும் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை அனைவரையும் ரகசியமாக கண்காணிப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஜாமீனில் உள்ள கைதிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருவார்கள். இந்நிலையில், உளவு பிரிவு போலீசார், எஸ்பி சக்திகணேசனுக்கு தகவல்களை சரிவர தெரிவிக்காமலும், போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, கிரைம் மீட்டிங்கில் எஸ்பி, உளவு பிரிவு போலீசாருக்கு கடும் டோஸ் விட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து ஒரு சில உளவுப்பிரிவு போலீசார்கள் எஸ்பிக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் உளவுப்பிரிவில் பணியாற்றிய போலீசார்களை பணியிடம் மாற்றம் செய்து, போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்ற உத்தரவிட்டார். இதில் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், ஜிஹெச் போலீஸ் ஸ்டேஷன் உளவு பிரிவு எஸ்பி ஏட்டு, வீரப்பன் சத்திரம் உளவு பிரிவு எஸ்பி ஏட்டு, பவானி சப் டிவிசன் உளவு பிரிவு எஸ்ஐ, அம்மா பேட்டை எஸ்பி ஏட்டு, வெள்ளி திருப்பூர் எஸ்பி ஏட்டு உட்பட 5 உளவு போலீசார்களை பணியிட மாற்றம் செய்து, உத்தரவிட்டுள்ளார்.