ஊட்டி,அக்.7:வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்களில் திமுக.,வினர் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் முபராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை கடந்த மாதம் முதல் தேதி அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் திமுக., நிர்வாகிகள் அனைவரும் ஒன்றினைந்து எவ்வித சுணக்கமுமின்றி முனைப்புடன் ஈடுபட வேண்டும் என்று தலைமை கழகத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இறந்த அல்லது இடம் பெயர்ந்த வாக்காளர்கள் நீக்காமல் தொடர்ந்து இடம் பெற்றிருந்தால் உரிய ஆதாரங்களை இணைத்து படிவம் 7ல் பூர்த்தி செய்து வாக்காளர் இறந்திருந்தால் இறப்பு சான்றிதழை அக்குடும்பத்தினரிடம் இருந்து பெற்று அவர்களது ஒப்புதல் கடிதத்தை இணைத்து தந்திடவேண்டும்.
மேலும், வாக்காளர் சேர்ப்பின் போது சேர்க்கப்பட்ட 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெறாமலிருந்தால் படிவம்-6ல் சேர்த்து உரிய ஆதாரங்களை இணைத்தும், வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் பிழை, திருத்தங்கள், முகவரி மாற்றம் ஏதாவது இருந்தால் படிவம் 8, படிவம் 8ஏ ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதன் மூலம் ஆளும்கட்சியினரின் போலி வாக்காளர்களை புகுத்தும் நோக்கத்தினை முரியடித்திட வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்த்த பின்பு பூர்த்தி செய்துள்ள படிவம் 6, படிவம் 7, படிவம் 8, படிவம் 8ஏ ஆகிய படிவங்களுடன் உரிய சான்றிதழ் ஆதாரங்களை இணைத்து ஏற்கனவே நடந்த சிறப்பு முகாம்களில் வழங்கிய படியே 7ம் தேதி இன்றும் வரும் 14ம் தேதியும் நடக்கும் சிறப்பு முகாம்களில் வழங்கிட வேண்டும்.