ஊட்டி,அக்.7: மாவட்டம் முழுவதும் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் ஊட்டி அருகேயுள்ள லவ்டேல் கிராண்டப் காலனி பகுதியில் உள்ள மக்களை இரு நாட்களுக்கு பாதுகாப்பான பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மலைப்பாங்கான பகுதி என்பதால், பெரும்பாலான மக்கள் மலைப்பாங்கான பகுதிகளில் வீடுகள் கட்டியுள்ளனர். குறிப்பாக, ஏழை எளிய மக்கள் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என அறிந்த போதிலும், வேறு வழியின்றி மலைச்சரிவுகளில் குடியிருப்புகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இதில், லவ்டேல் கிராண்டப் காலனி பகுதியும் ஒன்று. இங்குள்ள குடியிருப்புகள் அனைத்தும் செங்குத்தான மலை மீது கட்டப்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் பாதித்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு கன மழையின் போதும் இப்பகுதி பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது, நிலச்சரிவுகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கன மழை ெ்பய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அனைத்து துறைகளையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. மேலும், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வாழும் மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கியுள்ளது. ஊட்டி அருகேயுள்ள லவ்டேல் கிராண்டப் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் செங்குத்தான மலைச்சாரிவில் உள்ளதால், கன மழை பெய்தால், இப்பகுதி பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இரு நாட்கள் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் (பள்ளிகளில்) தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஊட்டி தாசில்தார் தினேஷ்குமார் நேற்று அப்பகுதிக்கு சென்று, கிராண்டப் பகுதி குடியிருப்பு வாசிகளிடம் இதனை தெரிவித்தார்.