திம்பம் மலைப்பாதையில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து 2 பேர் பலி: 24 பேர் படுகாயம்

சத்தியமங்கலம், அக்.7: சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே  இறந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு மைசூரிலிருந்து ஈரோடு நோக்கி வந்த தனியார் பஸ், 30 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பஸ்சை கர்நாடக மாநிலம் கெஞ்சனூரை சேர்ந்த டிரைவர் கவுதம்(29) என்பவர் ஓட்டிவந்தார்.  இந்நிலையில் திம்பம் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் மதியம் முதல் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம் நிலவியது. இந்நிலையில் தனியார் பஸ் 26வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது, நிலைத்தடுமாறி சாலையோர தடுப்பை உடைத்து பள்ளத்தில் பாய்ந்தது.பள்ளத்தில் 100 அடி தூரம் வரை சென்ற பஸ் மரத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ்சிலிருந்த 26க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. பனிமூட்டம் நிலவியதால், மீட்புபணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் ஏணி பொருத்தி ஒருவர் பின் ஒருவராக சுமார் 3 மணி நேரத்தில் அனைவரும் மீட்கப்பட்டனர்.  இதில் ஈரோட்டை சேர்ந்த முத்து மற்றும் குருசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் சடலமாக மீட்கப்பட்டனர். விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: