வைகோ கைதை கண்டித்து மன்னார்குடியில் மதிமுக மறியல்

மன்னார்குடி, அக். 10: சென்னையில் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் மதிமுகவினர் சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். சென்னையில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சந்திக்க சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்திற்கு  சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல் நிலையத்திலேயே வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதில் போலீசார் வைகோவை கைது செய்தனர். இந்நிலையில் சென்னையில் வைகோ கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் மதிமுக மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மதிமுகவினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் ஆரூர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் ஆகியோர் பேசினர். இதில் நகர செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: