திருவண்ணாமலையில் மாட வீதியில் வலம் வந்த பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை, அக்.10: திருவண்ணாமலையில் மாட வீதியில் வலம் வந்த கிருஷ்ணா தீர்த்த கலச ரத யாத்திரையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா வரும் 11ம் தேதி தொடங்கி 12 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தாமிரபரணியில் நீராட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் வரை தாமிரபரணியில் உள்ள முக்கிய தீர்த்தங்களில் பொதுமக்கள் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் தாமிரபரணி மகா புஷ்கரத்தையொட்டி கிருஷ்ணா தீர்த்த கலச ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்றுமுன்தினம் வேலூரில் தொடங்கிய ரத யாத்திரை நேற்று திருவண்ணாமலை வந்தடைந்தது.

திருவண்ணாமலை நகர எல்லைக்கு வந்த கிருஷ்ணா தீர்த்த கலச ரதயாத்திரையை விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பக்தர்கள் வரவேற்றனர். திருவண்ணாமலை சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் இருந்து புறப்பட்ட ரதயாத்திரை அண்ணாமலையால் கோயில் மாடவீதியில் வலம் வந்தது. அந்த ரதத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து, ரதம் செங்கம், ஊத்தங்கரை, அரூர், பாப்பிரெட்டி வழியாக மதுரை சென்றடைகிறது.

Related Stories: