கோவை, அக்.5: கோவை மாவட்டத்தில் மழை வெள்ளம், நோய் பாதிப்புள்ள பகுதிகளில் ‘ரெட் அலர்ட்’ திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பருவ மழை தீவிரமாகியுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமை கட்டுபாட்டில் 1000க்கும் மேற்பட்ட கசிவு நீர் குட்டை, சிறு தடுப்பணைகள் உள்ளது. மழை நீர் முழுவதும் குளம், குட்டைகளில் சேர்க்கும் வகையில் வாய்க்கால் சீரமைக்க, நீர் வழிப்பாதை அடைப்புகளை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் சிறுவாணி, பில்லூர் 1 மற்றும் 2, பவானி, ஆழியாறு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. சிறுவாணி, பில்லூர், பவானி குடிநீர் திட்ட குழாய் பல இடங்களில் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க, குழாய் மாற்றும் பணி நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.