கல்லால் தாக்கி மேஸ்திரி கொலை உறவினருக்கு வலை ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம்

ஆம்பூர், அக். 5: ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் கட்டிட மேஸ்திரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் மசூதி 2வது தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(41). கட்டிட மேஸ்திரி. இவரது அண்ணன் தீனதயாளன். இவரது மகள் வரலட்சுமி(32). இவருக்கும் திருத்தணியை சேர்ந்த காணிக்கைராஜ்(35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்ததாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வரலட்சுமி தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டாராம். இதனால் காணிக்கைராஜ், தனது மனைவி மற்றும் குழந்தைகளை தேடி நேற்று காலை பார்த்திபன் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த பார்த்திபனிடம், தனது மனைவி குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘உனது மனைவி இங்கு வரவில்லை' என்றாராம். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த காணிக்கைராஜ், அருகில் இருந்த கல்லால் பார்த்திபனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த காணிக்கைராஜ் அங்கிருந்து ப்பியோடினார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர், பார்த்திபனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தாலுகா இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து உம்ராபாத் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய காணிக்கைராஜை தேடி வருகின்றனர்.

Related Stories: