திருவண்ணாமலை, அக்.4: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து நேற்றும் பரவலான கனமழை பெய்தது. மேலும், சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 486 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காலம் தொடங்கியிருப்பதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் நேற்று மதியத்தில் இருந்தே மேகம் சூழ்ந்த நிலை காணப்பட்டது. அதைத்தொடர்ந்து, மதியம் 3 மணியளவில் தொடங்கிய கனமழை விட்டு, விட்டு இரவு வரை நீடித்தது. அதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டது. அவலூர்பேட்டை சாலையில் வழக்கம்போல மழை வெள்ளமும், கழிவுநீரும் சாலையில் பெருக்கெடுத்து தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிபட்டனர்.
இந்நிலையில், சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கியிருக்கிறது. அதன்படி, அணைக்கு வினாடிக்கு, 486 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.10 அடியாக உள்ளது. ஒரு நாளில் சுமார் ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.