செங்கம், செப்.28: சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கத்தில் 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவில் நிலம் அளவீடு செய்யப்பட்ட விவசாயிகளுடான கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் செங்கம் பிடிஓ அலுவலத்தில் நடந்த கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் கூட்டம் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து, நேற்று பிடிஓ அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெற்றிவேல் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 10 மணியளவில் அதிகாரிகள், விவசாயிகளின் வருகைக்காக காத்திருந்தனர்.