ஊட்டி, செப். 26: ஊட்டி லோயர் பஜார் பகுதியில் உள்ள ேஹாபார்ட் பள்ளியின் தடுப்பு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி லோயர் பஜாரில் பகுதியில் டவுன் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதன் அருகே ஹோபார்ட் துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியை சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. பழமை வாயந்த இந்த தடுப்பு சுவார், லோயர் பஜார் நடைபாதையை ஒட்டியே கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பு சுவரை ஒட்டியுள்ள நடைபாதையில் எந்நேரமும் பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம். பள்ளியின் தடுப்பு சுவரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுவரும் சாய்ந்துள்ளது. நீலகிரியில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் தற்போது இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும், ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழையும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பலவீனம் அடைந்த இந்த தடுப்பு சுவர் எந்நேரமும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், பள்ளி மாணவர்களுக்கோ அல்லது நடைபாதையில் செல்லும் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நடைபாதையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.