தூத்துக்குடியில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் சந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக சங்கு கூடத்தில் நாளை (26ம் தேதி) 11 மணிக்கு டிஆர்ஓ வீரப்பன் தலைமையில் நடக்கிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காஸ் உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
இதில் பெயர் மாற்றம், புதிய காஸ் உருளை வழங்குவதில் கால தாமதம், காஸ் விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, காஸ் உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், காஸ் உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் காஸ் பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளை இக்கூட்டத்தில் தெரிவித்து உரிய தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.