எரிவாயு சிலிண்டர் திருடியதாக சமையல் தொழிலாளியை கட்டிவைத்து சித்ரவதை

தர்மபுரி, செப்.21:  தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே மொட்டலூரை சேர்ந்தவர் மாதையன்(52). இவரது மனைவி தங்கம்மாள்(45). இவரது வீட்டில் கடந்த வாரம் காதணி நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த சமையலர் மூர்த்தி(37) என்பவர் சமையல் பணியை செய்துள்ளார். காதணி நிகழ்ச்சி நடந்த போது, சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் செல்போன் திருடு போனது. இதனால் மாதையன் சமையலர் மூர்த்தியிடம் திருட்டு குறித்து விசாரித்துள்ளார். ஆனால் மூர்த்தி தான் திருடவில்லை என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாதையன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்களது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் இருந்த ஒரு அறையில், மூர்த்தியை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதில் காயம் அடைந்த மூர்த்தி, மாதையன் வெளியே சென்றிருந்த போது, அறையின் மேற்கூரையை பிரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்த மூர்த்தி காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார், மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், மாதையன் அவரது மனைவி தங்கம்மாள், உறவினர் மணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் தோப்பூரை சேர்ந்த செல்வம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: