121 டாஸ்மாக் கடைகளில் பார் வசதி இல்லை : பொது இடங்களில் மது அருந்தும் குடிமகன்கள்

திருவள்ளூர், செப். 21: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளில் 121 கடைகளில் பார் வசதி இல்லாததால் வீதிகள், குடியிருப்பு பகுதிகளை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும், அரசுக்கு வருமானத்தை பெருக்கிடவும் கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மது பிரியர்களின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் அருகிலும் ‘பார்’ துவங்கப்பட்டது.இதனால் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கிக் கொண்டு, அருகில் உள்ள ‘பார்’களில் அமர்ந்து குடித்துவிட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளில், 40 கடைகளில் மட்டுமே ‘பார்’ இயங்கி வருகிறது.மற்ற 121 கடைகளில் ‘பார்’ இல்லாததால், குடிமகன்கள் தங்களுக்கு வேண்டிய சரக்குகளையும், பெட்டிக் கடைகளில் நொறுக்குத் திண்பண்டங்களையும் வாங்கிக் கொண்டு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்கள், பள்ளி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து ‘ஹாயாக’ குடிக்கின்றனர்.இவ்வாறு குடிமகன்கள் கும்பலாக அமர்ந்து குடிக்கும்போது, அருகில் வீடுகள் இருப்பதை பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசிக் கொள்வதால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் வீதிகளில் குடிக்கும் குடிமகன்கள் போதை ஏறியதும் தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் அதிகரித்து வருகிறது.

குடிமகன்கள் அடிக்கும் கொட்டத்தை பொறுக்க முடியாமல், அருகில் உள்ளவர்கள் தட்டிக் கேட்டால், ‘அரசு ஒயின் ஷாப் திறந்துள்ளது, நாங்கள் எங்கு சென்று குடிப்பது’ என கேள்வி கேட்கின்றனர். சில நேரங்களில் தட்டிக் கேட்பவர்களிடம் குடிமகன்கள் தகராறு செய்கின்றனர். இதற்கு பயந்தே அவர்களை எவரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லை.இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மது பிரியர்கள் சமீப காலமாக விடுமுறை நாட்களில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர்.இவ்வாறு பொது இடங்களில் குடித்துவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் மது பிரியர்களை, அவ்வழியாக ரோந்து போலீசார் பிடித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., பொன்னி அறிவுறுத்த  வேண்டும் என மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: