திருவள்ளூர், செப். 21: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளில் 121 கடைகளில் பார் வசதி இல்லாததால் வீதிகள், குடியிருப்பு பகுதிகளை குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருவகின்றனர். இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை தடுக்க வேண்டிய போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும், அரசுக்கு வருமானத்தை பெருக்கிடவும் கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அரசு சார்பில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மது பிரியர்களின் வசதிக்காக கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் அருகிலும் ‘பார்’ துவங்கப்பட்டது.இதனால் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கிக் கொண்டு, அருகில் உள்ள ‘பார்’களில் அமர்ந்து குடித்துவிட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 161 டாஸ்மாக் கடைகளில், 40 கடைகளில் மட்டுமே ‘பார்’ இயங்கி வருகிறது.மற்ற 121 கடைகளில் ‘பார்’ இல்லாததால், குடிமகன்கள் தங்களுக்கு வேண்டிய சரக்குகளையும், பெட்டிக் கடைகளில் நொறுக்குத் திண்பண்டங்களையும் வாங்கிக் கொண்டு அருகில் உள்ள பஸ் நிறுத்தங்கள், பள்ளி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், அரசு அலுவலக கட்டடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து ‘ஹாயாக’ குடிக்கின்றனர்.இவ்வாறு குடிமகன்கள் கும்பலாக அமர்ந்து குடிக்கும்போது, அருகில் வீடுகள் இருப்பதை பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசிக் கொள்வதால் வீடுகளில் வசிப்பவர்கள் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் வீதிகளில் குடிக்கும் குடிமகன்கள் போதை ஏறியதும் தங்களுக்குள் அடித்துக் கொள்வதும் அதிகரித்து வருகிறது.