உசிலம்பட்டி, செப்.19: எழுமலை அருகே குடிநீர் பிரச்சனையை தீர்க்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எழுமலை அருகே உள்ளது குன்னுவார்பட்டி கிராமம். இங்கு கடந்த 3 வருடங்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் புழுக்கள் கலந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த குன்னுவார்பட்டி கிராமமக்கள் எழுமலை-எம்.கல்லுப்பட்டி உலைப்பட்டி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்காவிட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம் என்று கூறி, ரேஷன்கார்டுகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சேடபட்டி ஒன்றிய ஆனையாளர் ஆசிக், பேரையூர் துணை வட்டாட்சியர் வீரமுருகன், இன்ஸ்பெக்டர் ரமாராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு கிராமமக்கள் உடன்படவில்லை. ஆணையாளர் ஆசிக் உடனே, ‘‘என்னோடு ஊருக்குள் வாருங்கள். உடனே மோட்டார் பொருத்தி, பைப் இணைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்று உறுதியளித்தார். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.