புதுச்சேரி, செப். 19: புதுவை, கோவிந்தசாலை, பகத்சிங் வீதியைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் சுப (40). 10 வருடங்களுக்கு முன்பு சித்த மருத்துவரான அருணதீபன் என்பவருடன் திருமணமாகி அவரை சில மாதங்களிலே பிரிந்த நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.கடையில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்த சுபக்கு சமீபத்தில் தலையில் கட்டி இருப்பது தெரியவரவே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தாராம். இதனிடையே அவரது தாயும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மகன் வீட்டிற்கு சென்ற நிலையில் தந்தையுடன் சுப தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனிமையில் மனவிரக்தியடைந்த சுபநேற்று முன்தினம் வீட்டு சமையல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.