அரூர், செப்.19: அரூர் தாலுகா பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பாப்பம்பாடி ஊராட்சியில் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலையளிப்பு திட்டத்தின் கீழ் 2015-16ம் ஆண்டில் ₹12.5 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டுள்ளது. 2 ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை சேவை மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கிறது. சேவை மையம் திறக்கப்பட்டால், இணைய வாயிலாக பட்டா, சிட்டா, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் ஆகியவற்றை பெறுவதற்கு உதவும். எனவே, புதிதாக கட்டப்பட்ட சேவை மைய கட்டங்களை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.