ஓட்டப்பிடாரம், செப்.19: பசுவந்தனை அருகே கப்பிகுளத்தில் கடந்த ஒரு மாதமாக கிராமமக்களுக்கு ஒரு வகையான மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலி மற்றும் கை வலி ஏற்படுகிறது. அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டும் காய்ச்சல் கட்டுக்குள் வராமல் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளிலும் நெல்லை உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். காய்ச்சலால் பாதித்த சந்தானம் என்பவர் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் இறந்தார். இந்நிலையில் நேற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜ் ஆலோசனையின்படி அவரது நேர்முக உதவியாளர் மாரிமுத்து, வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி, பசுவந்தனை மருத்துவ அலுவலர் டாக்டர் அன்புமாலதி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதுரம் பிரைட்டன், சுகாதார ஆய்வாளர்கள் காளிமுத்து மற்றும் குழுவினர் காய்ச்சல் பாதித்த மக்களிடமிருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து நெல்லை முதுநிலை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.