கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதி இளம்பெண் பலி

கோவில்பட்டி, செப்.19: கோவில்பட்டி அருகே ஏழாயிரம்பண்ணையை அடுத்த எலுமிச்சங்காய்பட்டியைச் சேர்ந்த முனியசாமி மகன் மருதராஜ்(21). பாலிடெக்னிக் படித்துள்ள இவர் சென்னையில் ஒரு  தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மருதராஜ் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று மருதராஜ் பைக்கில் கோவில்பட்டிக்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள தூங்காரெட்டிபட்டியைச் சேர்ந்த வைரபாகு மகள் கன்னியம்மாள்(21) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் மருதராஜ் ஏழாயிரம்பண்ணை வழியாகத்தான் செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து கன்னியம்மாள், பைக்கில் ஏறி கொண்டார்.

கோவில்பட்டி லட்சுமிமில் ரயில்வே மேம்பாலத்தில் செல்லும்போது, முன்னாள் சென்ற  டிப்பர் லாரியை முந்த முயன்றார். அப்போது எதிரே வாகனம் வந்ததால் நிலை தடுமாறிய பைக், லாரியில் மோதியது. இதில் கன்னியம்மாள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருதராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.  தகவலறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ், மேற்கு இன்ஸ்பெக்டர் விநாயகர், சப்இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த மருதராஜை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: