குளச்சல், செப்.19: தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய உயர்நீதி மன்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று மாலை குமரி மாவட்ட முதன்மை நீதிபதி கருப்பையா மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் திடீர் ஆய்வு நடத்தினார். கோயில் வளாகத்திற்குள் சென்ற நீதிபதி வாசலில் இருந்த பூக்கடையில் பூ வாங்கினார். பின்னர் அர்ச்சனை சீட்டு வாங்கி கோயிலுக்குள் சென்று வழிபட்டார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்கடைகள், பிரசாதம் ஸ்டால் மற்றும் கோயில் சுற்றுப்பிரகாரம், பொங்கலிடும் பகுதி, குடிநீர் வசதி ஆகிய இடங்கள் சுத்தமாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மற்றும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அறை, தரிசனம் செய்வதற்கு முதியோர்களுக்கு முன்னுரிமை போன்றவை குறித்தும் பக்தர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தலைமை குற்றவியல் நீதிபதி பாண்டியராஜ் மற்றும் சட்டபணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுகள் குறித்து மாவட்ட நீதிபதி கருப்பையா குறிப்பு எடுத்துக் கொண்டார்.