நாகர்கோவில், செப்.19: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் மொத்தம் 3 பிரிவுகளில் 60 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் டிப்ளமோ படிப்புகள் மட்டுமே உள்ளன. இங்கு பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகள் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் இருந்து வந்தன. கடைசியாக மருத்துவக்கல்லூரி முதல்வராக (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் இருந்த சமயத்தில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த கடிதங்களின் அடிப்படையில் ஆய்வு குழுவினர் மருத்துவக்கல்லூரிக்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பி.எஸ்.சி. மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.