மன்னார்குடி, செப்.18: மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. சேரன்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தையொட்டி பிரம்மோற்சவம் நடை பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடத்தப்பட்டது. தங்க நகைகள், பட்டு வஸ்திரம் அணிந்து வைகுண்ட நாதனாக தங்க கருட வாகனத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபாராதனை தொடர்ந்து உற்சவர் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். வானவேடிக்கைகள், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் வேதபாராயணங்கள் முழங்க இந்த வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.