தஞ்சை, செப். 18: தஞ்சை பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. அப்போது ரயில்வே கீழ்பாலத்தில் தேங்கிய தண்ணீரில் தனியார் பேருந்து சிக்கியது. தஞ்சை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. மாலை 6 மணி முதல் 2 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை அண்ணா சிலை பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் தஞ்சை சேவியர் நகர் 1வது தெருவில் உள்ள ஒரு தென்னைமரம் தீப்பிடித்து எரிந்தது. சூறைக்காற்றால் கீழவஸ்தாச்சாவடி பகுதியில் வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள ரயில்வே கீழ்பாலத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்படைந்து. மேலும் கீழ்பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பஸ் சிக்கியது. இதனால் பஸ்சிலிருந்து வெளியே வர முடியாமல் பயணிகள் தவிர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து பயணிகளை மீட்டனர். தஞ்சை ரயில் நிலைய முன்பகுதியில் பயணிகள் காத்திருக்கும் அறைக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.