நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் அஷ்டமி ஹோமம்

கும்பகோணம், செப். 18:  கும்பகோணம் அடுத்த நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் கோயிலில் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடந்தது. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் 40ல் நடுநாயகமாக திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்னும் நாதன்கோயில் சேத்திரமாகும். கும்பகோணம் அடுத்த நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஜெகந்நாத பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். நந்திக்கு சாபவிமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தி பெயரிலேயே தீர்த்தமுடைய சிறப்பு பெற்ற தலம். இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று  வளர்பிறை அஷ்டமி என்பதால் செண்பகவல்லி தாயாருக்கு அஷ்டமி ஹோமம், மூலவர் உற்சவம், திருமஞ்சனம், தாயார் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: