செந்துறை,செப்.18: கல்லூரி பேராசிரியர் அடித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார், இது தொடர்பாக பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ஆதனக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் தட்சிணாமூர்த்தி (18). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் (டிஎம்இ) மூன்றாமாண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்து தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி பெரியப்பா மகனின் திருமணத்திற்கு விடுப்பு கேட்டுள்ளார். இதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. அண்ணன் திருமணம் என்பதால் விடுப்பு எடுத்து மறுநாள் கல்லூரிக்கு சென்ற போது கல்லூரி பேராசிரியர் வேல்முருகன் என்பவர் மாணவர்கள் மத்தியில் தட்சணாமூர்த்தியை அடித்து, திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் வைத்து கடந்த 8ம் தேதி எலிகொல்லி மருந்தை தின்றுள்ளார். தகவலறிந்த சகமாணவர்கள் அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர்.