கரூர், செப். 18: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் தன்னிறைவுத் திட்டத்தின்கீழ் ரூ.15.25லட்சம் மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டிட விரிவாக்கம் செய்யும் பணிக்கு புகளூர் வட்டார பொதுநலக் குழுவினர், பொதுமக்களின் பங்குத்தொகையாக ரூ.5லட்சத்து 9ஆயிரத்து 898 மதிப்பிலான வங்கி கேட்பு வலைவோலையை கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் நேரில் வழங்கினர். கடந்த 1999ம் ஆண்டு புகளூர் வட்டார பொது நலக்குழுவின் சார்பில் ரூ.7லட்சம் மதிப்பிலான நிலம் வாங்கி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது மற்றும் ரூ.40லட்சம் பொதுமக்களின் பங்குத்தொகையாக இந்த குழுவால் வழங்கப்பட்டு தன்னிறைவுத் திட்டத்தில் ரூ.126.55 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக புகளூர் வட்டார பொது நலக்குழுவின் சார்பில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் புகளூர் வட்டார பொதுநலக்குழுவின் சார்பில் முன்னாள் எம்எல்ஏ வடிவேல், சிவசுப்ரமணியன், கரூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் நாச்சிமுத்து, புஞ்சை புகளூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முனுசாமி, வழக்கறிஞர் சிதம்பரன், குழந்தைசாமி, பழனிசாமி, பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்