கரூர், செப்.18: கரூர் 39வது வார்டில் வடிகால் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர் நகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு தாந்தோணி தில்லைநகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 1 வருடத்திற்கு முன் சாலை மற்றும் வடிகால் வசதி கட்டும் பணி துவங்கி இன்னும் முழுமை பெறவில்லை. இதனால் வடிகாலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசு தொல்லையால் நோய் மற்றும் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், மழைகாலங்களில் சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்துவிடுவதாகவும் கூறி கடந்த ஜூலை மாதம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.