மதுரை, செப்.18: மதுரை மாவட்ட பித்தளை பட்டறை தொழிலாளர்கள் 30 சதவீத கூலி உயர்வும், 10 சதவீத போனஸ், எடைக்கு எடை கூலி வழங்கக் கோரி கடந்த 3ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 நாட்களாக யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
இந்நிலையில், மாவட்ட பித்தளை பட்டறை தொழிலாளர்கள் ஏராளமானோர் நேற்று சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கூலி உயர்வு வேண்டும், போனஸ் வழங்க வேண்டும். தொழிலாளர் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கின்றனர் என கோஷம் போட்டனர். பின்பு கோரிக்கை தொடர்பாக மனுவை கலெக்டர் நடராஜனிடம் வழங்கினர். மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘தினமும் அரை டன் பித்தளை பாத்திரங்களை உற்பத்தி செய்து தருகிறோம். ஒரு கிலோவுக்கு ரூ.21 கூலியாக கொடுக்கின்றனர். எங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு கொடுக்க வேண்டும். தற்போது 2 ஆண்டுகள் முடிந்துவிட்டன. 30 சதவீத கூலி உயர்வு, 10 சதவீத போனஸ் கேட்கிறோம். மேலும் நாங்கள் 2 கிலோ 500 கிராம் எடையுள்ள பாத்திரம் தயாரித்தால், உரிமையாளர்கள் 2 கிலோவுக்கு மட்டுமே கூலி கொடுக்கின்றனர். இதனால், உற்பத்தியாகும் பாத்திர எடைக்கு ஏற்ற கூலி தர வேண்டும். ஆனால் பட்டறை உரிமையாளர்கள் கூலியை உயர்த்தி தர மறுத்தனர்’’ என்றார்.