கடல் அலையில் சிக்கிய மாணவன் பலி

திருப்போரூர், செப்.18: கோவளம் கடலில் குளித்த மாணவன் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.  சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய  குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன்  சக்தி விக்னேஷ் (22). இவர் மேடவாக்கம் அருகே திருவஞ்சேரியில் உள்ள தனியார்  பாலிடெக்னிக் ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில்  நேற்று வகுப்பு முடிந்து பிற்பகல் 2 மணியளவில் நண்பர்களுடன் கோவளம்  கடற்கரைக்கு சென்ற சக்தி விக்னேஷ் அங்கு கடலில் இறங்கி குளித்தார். அப்போது  ராட்சத அலை இழுத்துச் சென்றதில் சக்தி விக்னேஷ் கடலில் மூழ்கினார். உடன்  இருந்த நண்பர்கள் இதைப்பார்த்து கூச்சல் போட்டனர். உடனடியாக நண்பர்களும்  கடற்கரையில் இருந்த பொதுமக்களும் கடலில் நீந்திச் சென்று நீரில் மூழ்கிய  சக்தி விக்னேஷை மீட்டனர். அதற்குள் மூச்சுத்திணறி அவன் உயிரிழந்தது தெரிய  வந்தது. இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் மாணவனின்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

Related Stories: