வேப்பூர், செப். 18: வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (43). இவரது வீட்டுக்கு செல்லும் பாதையை அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் தரப்பினர் ஆக்கிரமித்தாக தெரிகிறது. இதையடுத்து கொளஞ்சியப்பன் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தார். தொடர்ந்து வருவாய்த்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று நிலத்தை அளந்து, அளவுகள் குறித்து இருதரப்பினரிடமும் விளக்கம் அளித்தனர். அப்போது மீண்டும் கொளஞ்சியப்பன் தரப்பினருக்கும், பழனிவேல் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இருதரப்பை சேர்ந்த 15 பேர் மீது வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, பா.கொத்தனூரை சேர்ந்த ராஜமாணிக்கம் (48), செந்தில் (35), ஆறுமுகம் மனைவி கொளஞ்சி (55), கொளஞ்சியப்பன் மனைவி கலையரசி (40), தனபால் மனைவி கொளஞ்சி (42) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.