‘அதிமுக பணத்தில் உடலை வளர்த்தவர் டிடிவி.தினகரன்’ : பா.வளர்மதி

ஆலந்தூர்: சென்னை நங்கநல்லூர், எம்ஜிஆர் சாலையில் ஆலந்தூர் நகர அதிமுக சார்பில், அண்ணாவின் 110வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘புதுக்கோட்டையில் டிடிவி.தினகரன் வாக்கிங் சென்றாராம். அப்போது எதிரே வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘என்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. என்னை முதல்வர் எடப்பாடி காப்பாற்ற மாட்டார் என நினைக்கிறேன்’ என கூறியதாக டிடிவி.தினகரன் பில்டப் செய்து பேசுகிறார். அவர் தமிழக முதல்வர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். டெண்டரில் ஊழல் என்கிறார். யார் வீட்டில் ரெய்டு நடந்தாலும், எடப்பாடி அரசு கவிழ்ந்துவிடும் என்கிறார். ஏடிஎம் மையத்தை உடைத்து திருடு நடந்தால்கூட, எடப்பாடி அரசுதான் காரணம் என தினகரன் கூறி வருகிறார். ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட இவர் முதல்வர் சேரில் அமர துடிக்கிறார். இவர் இருக்கும் வீடு, பங்களா, சொத்து, அதிமுக தொண்டர்களின் உழைப்பினால் வந்தது. இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் டிடிவி.தினகரன், கட்சி காசில் தனது உடலை வளர்த்தவர். அப்படிப்பட்டவர் அதிமுக ஆட்சியை குறை சொல்லலாமா’’? என்றார்.

Related Stories: