திண்டிவனம், செப். 12: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. மாவட்ட அவை தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாநில தீர்மானக்குழு துணை தலைவர் மாசிலாமணி எம்எல்ஏ, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்எல்ஏ, தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். விழுப்புரம் நகரில் வரும் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவில் வடக்கு மாவட்டம் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து கிராமத்திலும் மறைந்த கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது, என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.