சிறுபான்மையினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்

புதுக்கோட்டை, செப்.12:  மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் புதுகை கலெக்டர் அலுவலகத்தில்

நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பிரகாஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் கல்வி உதவித்தொகை, ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு ரூ.20 ஆயிரம் அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம், தனிநபர் தொழில்கடன் மற்றும் குழுக்கடன், புதுக்கோட்டை மாவட்டம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள், உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் மூலம் வழங்கப்பட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுபான்மையினர் சமுதாய மக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளனவா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் பேசுகையில், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லும் புனித பயண திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டிற்கு 6 பேர் செல்கின்றனர். இதன் மூலம் இதுவரை 4 ஆயிரம் பேர் ஜெருசலேத்திற்கு புனித பயணம் சென்றுள்ளனர். நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழக அரசு 40 கிலோ சந்தன கட்டையை ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. ரம்ஜான் நாட்களில் மசூதிகளில் நோன்பு கஞ்சி திறக்கும் வகையில் 4 ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டு வந்ததை தற்போது 6 ஆயிரம் டன் அரிசியை தமிழக அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவி தொகை, தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே சிறுபான்மையினர் நலனுக்காக அரசால் செயல்படுத்த கூடிய பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற

வேண்டும் என்றார்.   கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: