அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி

புதுக்கோட்டை, செப்.12: புதுகை கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2ம் கட்ட மாவட்ட கலந்தாய்வு முடிவுற்ற பின்னர் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப 3ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளதால் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இணையதள முகவரில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி முதல் இன்று (12ம் தேதி) வரை விண்ணப்பம் மற்றும் விளக்க கையேட்டினை மாணவர்கள் பார்வையிடலாம். மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். ஒரு மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்விற்கான தரவரிசை மற்றும் நிகழ்ச்சி நிரலும், இதே இணைய தளத்தில் பின்னர் வெளியிடப்படும். இணையதளத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்தெந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் தரப்பட்டுள்ளது.  இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று (12ம் தேதி) கடைசி நாள் ஆகும். 2ம் கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை 3ம் கட்ட மாவட்ட கலந்தாய்வு 3 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு புதுக்கோட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: