கடலூர், செப். 12: கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழ்துறை தலைவர் குமரன் வரவேற்றார். தமிழ் இலக்கிய மன்றத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் சிறப்புரையாற்றினார். முன்னாள் தலைவர் அர்த்தநாரி இலக்கிய பேரூரையாற்றினார். விழாவில் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் பழனிவேலு நன்றி கூறினார்.
விழாக்காலம், உற்பத்தி குறைவு பூக்கள் விலை கிடுகிடு உயர்வுகடலூர், செப். 12: கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பூ விற்பனையில் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். சில்லரை மற்றும் மொத்த விற்பனை இதில் அடங்கும். இந்நிலையில் கடலூர் பகுதியில் பூக்கள் விற்பனை ஓசூர், பெங்களூரு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரும் பூக்கள் மற்றும் நானமேடு, உச்சிமேடு, புதூர் உள்ளிட்ட உள்ளூர் விளைச்சலில் இருந்து வரும் பூக்கள் மூலம் அமைந்துள்ளது.இந்நிலையில் உற்பத்தி குறைவு மற்றும் விழாக்காலம் துவக்கம் காரணமாக கடலூரில் பூக்கள் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதன்படி கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லி தற்போது ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முல்லை ரூ.300ல் இருந்து 640க்கும், கனகாம்பரம் ரூ.300ல் இருந்து 600க்கும், சாமந்தி ரூ.120ல் இருந்து ரூ.240க்கும், கலர் ரோஸ் கிலோ ரூ.120ல் இருந்து ரூ.240க்கும், அரளி ரூ.20ல் இருந்து ரூ.80க்கும், கேந்தி கிலோ ரூ.20ல் இருந்து ரூ.40க்கும், கோழிக்கொண்டை ரூ.25ல் இருந்து ரூ.40க்கும் விலையேற்றம் கண்டுள்ளது.இது குறித்து பூ வியாபாரி வெங்கடேசன் கூறுகையில், கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பூக்கள் விற்பனை நாள்தோறும் சுமார் 500 கிலோ முதல் 2 டன் வரை இருக்கும். விழாக்காலங்களில் இது உயரும். பூ விளைச்சல் உள்ள இடங்களில் தொடர் மழை காரணமாக விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது என்றார்.