டிசி கொடுத்து 11 மாணவர்களை வெளியேற்றிய விவகாரம் அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை 11 பேரையும் வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

திருப்பத்தூர், செப்.11: பொம்மிகுப்பம் அரசு பள்ளியில் தலைமையாசிரியர் டிசி கொடுத்து 11 மாணவ, மாணவிகளை வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் நேற்று விசாரணை நடத்தினார். பின்னர் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்க எடுக்கப்படும் என்றார்.  வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 638 மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி கடந்த 6ம் தேதி திடீரென 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 11 பேருக்கு மாற்றுச்சான்றிதழ் (டிசி) வழங்கினார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையிலும் யாரையும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். அப்போது அவர், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை தன்னிடம் எந்த தகவலும் தெரிவிப்பது கிடையாது என அவர் மீது குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், நேற்று மாவட்ட கல்வி அலுவலர் சாம்பசிவம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பொம்மிகுப்பம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து, 2 மணிநேர விசாரணைக்கு பின் மாவட்ட கல்வி அலுவலர் சாம்பசிவம் கூறுகையில், ‘12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பை சேர்ந்த 11 மாணவ, மாணவிகள் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமையாசிரியை சாந்தியிடம் விசாரித்தோம்.அவரும் மாணவர்களின் செயல்பாடுகளை விளக்கி கடிதமாகவும் அளித்துள்ளார். எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவர்களை வேறு ஆண்கள் பள்ளியிலும், மாணவிகளை பெண்கள் பள்ளியிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: