இறுதிவரை கொள்கைக்காக வாழ்ந்தவர் கருணாநிதி

சேலம், செப்.11: பதவிக்காக அன்றி, இறுதி வரை கொண்ட கொள்கைக்காகவே வாழ்ந்தவர் கருணாநிதி என திருச்சி சிவா எம்பி  பேசினார்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில், கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், திருச்சி சிவா எம்பி பேசியதாவது:பல துறைகளில் சாத னை படைத்தவர் கருணாநிதி. அண்ணா அமைச்சரவையில் போக்குவரத்து, பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, முற்போக்கு சிந்தனைகளுடன் செயல்பட்டார். பஸ்களை நாட்டு உடமையாக்கினார். இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களையும் விமர்சித்துள்ளார். ஆனால், அவர்கள் எல்லோரிடமும் அன்புடன் மரியாதையாக நடந்து கொள்வார். தமிழகத்தில் 50 சதவீத பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் இருந்து 20 சதவீதத்தை பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கு உருவாக்கி செயல்படுத்தியவர் கருணாநிதி. தாழ்த்தப்பட்ட  சமூக மக்களை தலை நிமிர செய்தார். திரைப்படங்களில் மக்களின் பிரச்னை பற்றி எழுதிய வசனங்களை, பிற்காலங்களில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின், அதற்கு புதிய சட்டங்களை இயற்றி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டார். ஒரு காலக்கட்டத்தில், மாநில கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வதந்தி பரவியது. அப்போது, மாநில கட்சிகள், அகில இந்திய கட்சிகளாக பெயர் மாற்றிக்கொண்டன. ஆனால், கருணாநிதி தனது கொள்கையில் இருந்து மாறாமல் நிலையாக நின்றவர் கருணாநிதி. பதவிக்காக வாழாமல், இறுதி வரை கொள்கைக்காகவே வாழ்ந்தவர் கருணாநிதி. இயக்கத்தை காப்பாற்ற மு.க. ஸ்டாலினை கொடுத்து விட்டு சென்றுள்ளார். மத்தியில் ஆளும் பாஜவுக்கு எதிரான நடவடிக்கையை மு.க ஸ்டாலின் இப்போதே தொடங்கி விட்டார். நாடு முழுவதும் காவிமயமாக்க முயற்சிக்கும் பாஜவின் கனவை மு.க ஸ்டாலின் தவிடு பொடியாக்குவார். இவ்வாறு திருச்சி சிவா எம்பி பேசினார்.

இந்த கூட்டத்தில் கவிஞர் ஜெயந்தா, எழுத்தாளர் வெங்கடேசன் ஆகியோர் புகழுரையாற்றினர். கூட்டத்தில்,  மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாசு, தலைமை செயற்குழு உறுப்பினர் சூடாமணி, துணை செயலாளர்கள் ரகுபதி, லதாசேகர், தீர்மான குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், பொது குழு உறுப்பினர் நாசர்கான், மாநகர செயலாளர் ஜெயகுமார், மாநகர துணை செயலாளர்கள் கணேசன், கந்தசாமி, நிர்வாகிகள் அருண் பிரசன்னா, அறிவழகன், பச்சியப்பன் உள்பட ஏராளமான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: