திருப்பூர், செப். 11: திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தொழில் நகரமான திருப்பூரில் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்து தினமும் 1.5 லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த மக்களின் வாழ்விடமாக திருப்பூர் உள்ளது. இங்கு போலீசாருக்கு சவால் விடும் வகையில், பல குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக, திருப்பூரில் வீடு புகுந்து திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகிறது. குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்களின் வீடுகளில், பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் உள்ள பணம், நகைகளை திருடர்கள் திருடிச் செல்கின்றனர். பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் மாயமாகியுள்ளன. நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு, இரவில் வருபவர்களை கத்திமுனையில் மிரட்டி, பணம் பறித்த வழக்குகளும் அதிகளவில் பதிவாகியுள்ளன. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே, குற்றச் சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.