அவிநாசி, செப். 11: திருப்பூர் மாநகராட்சி 1வது வார்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி முதலாவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி 1வது வார்டு ராமசாமி தோட்டம், கைகோளன் தோட்டம் வீரப்பசெட்டியார் தோட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதி சரிவர இல்லை. அடிப்படை வசதி செய்து தரக் கோரியும், சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி உயர்வை கைவிட வலியுறுத்தியும், திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் உள்ள மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஐ சார்பில் முன்னாள் கவுன்சிலர்கள், ரவிச்சந்திரன், செல்வராஜ், விஜயா கிளை செயலாளர் செந்தில் உள்பட 180க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.