விருதுநகர், செப். 11: திருவில்லிபுத்தூரில் மகளிர் நடத்தும் ரேஷன் கடையை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விருதுநகரில் கலெக்டரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில், கம்மாப்பட்டி திருமலாபுரம் நாடார் உறவின்முறை மற்றும் காளீஸ்வரி மகளிர் ரேஷன் கடை நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவில்லிபுத்தூர் 29வது வார்டு கம்மாபட்டியில், கடந்த 2001 ஏப்.2 முதல் காளீஸ்வரி மகளிர் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம், 791 கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் குறிப்பிட்ட தேதியில் விடுதலின்றி வழங்கப்படுகிறது.சிறப்பான முறையில் மகளிர் நடத்தும் இந்த ரேஷன் கடையை பொதுமக்கள் பாராட்டுகின்றனர். இந்நிலையில், மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் மகளிர் நிர்வாகிக்கும் ரேஷன் கடையை (ஆர்.41) வேளாண் கூட்டுறவு சங்க கடையாக மாற்ற முயற்சி எடுத்து வருகிறது. எனவே, கம்மாப்பட்டி ரேஷன் கடை, மகளிர் நிர்வகிக்கும் ரேஷன் கடையாக தொடர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.