பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ. கட்சியினர் கைது

ஊட்டி,செப்.11: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நேற்றுபந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  நீலகிரி மாவட்டத்திலும் நேற்று இதற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.சிலஇடங்களில் தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோ இயக்கப்படவில்லை.  இந்நிலையில், ஊட்டியில் நேற்று சிபிஐ., எம் சார்பில் ஏடிசி., பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.போராட்டத்திற்கு ஊட்டி வட்டார செயலாளர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக இவ்வழித்தடத்தில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கூடலூர்:  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று  திமுக மற்றும் காங்கிரஸ்  கட்சிகள் சார்பில் கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வால்  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதாகவும், மத்திய,மாநில அரசுகள்  எரிபொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும்  கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டணர்.

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை  சிறுத்தை கட்சிகள் சார்பில் பழைய பேருந்து நிலையம் கள்ளிக்கோட்டை சாலை  சந்திப்பில் மத்திய, மாநில அரசுகளை  கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 4  பெண்கள் உள்ளிட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர். மஞ்சூர்: நேற்று மஞ்சூரில் வாரசந்தை தினம் என்பதால் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. அதே சமயம் மஞ்சூர் தனியார் வாகன ஓட்டுனர் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து வாகனங்களும் நேற்று காலை முதலே இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் பிற்பகல் குந்தா வட்டார காங்கிரஸ் தலைவர் நேரு, மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் துணை தலைவர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பஜார் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடம் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்கள். இதை தொடர்ந்து நேற்று மாலை 3மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டது. அண்டை  மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து எந்த  வாகனமும் நீலகிரி  மாவட்டத்துக்கு இயக்கப்படாததால் வெளி மாநிலங்களுக்கு  செல்லும் தமிழக அரசுப்  பேருந்துகள் கூடலூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதேபோல் கூடலூர் அரசு  போக்குவரத்து கிளையில் இருந்து உள்ளூர் பேருந்துகள்  மட்டும் இயக்கப்பட்டன.

Related Stories: