ஊட்டிக்கு விநாயகர் சிலைகள் வந்தன

ஊட்டி,செப்.11: வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.  ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது, வீடுகளில், கோயில்களில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிப்படுவது வழக்கம். சிறிய சிலைகள் முதல் பெரிய சிலைகள் வரை தங்கள் வசதிக்கேற்ப பலரும் வாங்கி வைப்பது வழக்கம். இம்முறை வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி வரும் நிலையில், தற்போது ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ெபாது இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வண்ண விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது ஊட்டி அருகேயுள்ள காந்தல் பகுதியில் உள்ள கோல் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி தினமான 13ம் தேதி இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அங்காங்கே பிதிஷ்டை செய்யப்படவுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் முதல் 5 நாட்கள் வரை வைக்கப்படும் இச்சிலைகள் பின் நீர்நிலைகளில் கரைக்கப்படவுள்ளது. சிறியது முதல் ெபரியது வரையிலான வண்ண,வண்ண சிலைகள் கோயில் மண்டபத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி  இந்து முன்னணி சார்பில் கூடலூரில்  பூஜை செய்வதற்காக 51 விநாயகர்  சிலைகள் நேற்று கூடலூருக்கு கொண்டு வரப்பட்டன. இந்து முன்னணி மாவட்ட  செயலாளர் ஆனந்த் தலைமையில் சிலைகளை அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு  சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சதுர்த்தி விழா  முடிந்ததும் 16 தேதி சிலைகளை கரைக்க எடுத்து செல்லும் விசர்ஜன ஊர்வலம்  நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பது, விசர்ஜன ஊர்வலம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது.  இதற்கு குன்னூர் ஆர்.டி.ஓ. பத்ரிநாத் தலைமை தாங்கினார். தாசில்தார் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மோகன், துணை தாசில்தார் நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முதலாவதாக அனுமன் சேனா நிர்வாகி மோகன்ராஜ் தலைமையிலான குழுவினருடனும், 2வதாக இந்து முன்னணி நிர்வாகி ரத்னம் தலைமையிலான குழுவினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.  அப்போது விசர்ஜன ஊர்வல சிலைகளை விசர்ஜனம் செய்துவிட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இருதரப்பினரும் ஒரே நாளில் விசர்ஜன ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டுள்ளதால், அதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆலோசித்து முடிவு சொல்லப்படும் என்று அதிகாரிகள் கூறினர். கூட்டத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: