உயிருக்கு போராடும் கணவருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை மறுப்பு கலெக்டரிடம் கைக்குழந்தையுடன் மனைவி புகார்

வேலூர், செப்.11: உயிருக்கு போராடும் கணவருக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை மறுப்பதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்து. டிஆர்ஓ பார்த்தீபன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர். அதில், குடியாத்தம் அடுத்த தாட்டிமானப்பல்லி கிராமத்தை சேர்ந்த பவித்ரா என்பவர் அளித்த மனுவில் கூறியதாவது:எனது கணவர் விவசாயம் செய்து வருகிறார். எங்களுக்கு 2 மாதத்திற்கு முன் குழந்தை பிறந்தது. தற்போது எனது தாய் வீட்டில் உள்ளேன். கடந்த 2ம்தேதி மாலை பொய்கை அருகே எனது கணவர் வெங்கடாஜலபதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவருக்கு என்னிடம் இருந்த நகைகளை விற்று ₹3 லட்சம் வரை செலவு செய்தோம். ஆனால் அவர் குணமடைந்து மீண்டு வர மருத்துவமனை நிர்வாகம் அதிக பணம் கேட்கிறது.

இதனால் தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உதவி கேட்டபோது, அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை தர முடியாது என மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. எனது கணவர் உயிரை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறேன். எனவே, தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளித்து எனது கணவரை காப்பாற்ற தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.பேரணாம்பட்டு தாலுகா வேப்பூர், சித்தாத்தூரை சேர்ந்த அம்சவேணி தலைமையில் வந்த பொதுமக்கள் கண்களை கட்டிக்கொண்டு அளித்த மனுவில், ‘அதில் எங்கள் ஊரில் 60 ஆண்டு பழமையான கொம்மாத்தம்மன் கோயில் முன்புறம் இருந்த விநாயகர், அனுமன், அன்னதான கூடம் ஆகியவற்றை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஒரு தரப்பினர் இடித்து தள்ளிவிட்டனர். ஆனால் அதனை அகற்ற ஐகோர்ட் தடை விதித்தது. இருப்பினும் கோர்ட் உத்தரவை மீறி கட்டிடம் கட்டி வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் 15 பேர் சேர்ந்து கோயிலுக்கு பூட்டு போட்டனர். இதனை தட்டிக்கேட்டதற்கு மிரட்டல் விடுக்கின்றனர். கட்டிடம் கட்டும் பணியை தடை செய்யவேண்டும்’ என்று அதில் கூறியிருந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்பிரசாத்தின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எனது மகன் சாவுக்கு காரணமான 5 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலைக்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் மீது விசாரணை குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நியாயம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். எங்கள் பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

Related Stories: