சேலம், செப்.9:சேலம் அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நங்கவள்ளி அருகேயுள்ள பெரியவனவாசி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் திருமலை மகன் முருகன்(45), தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று, தன்னுடன் வேலை பார்த்து வரும் பெரியவனவாசி ஆயதாசனூரை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (47) என்பவருடன் பைக்கில் ஜலகண்டாபுரத்திற்கு தேங்காய் வெட்டச் சென்றார். மாலையில் 2 பேரும், மீண்டும் நங்கவள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். நங்கவள்ளி சன்னாசி முனியப்பன் கோயில் அருகே சென்ற போது, முன்னால் சென்ற ஒரு பைக்கை முந்திக்கொண்டு வேகமாக சென்றுள்ளனர். அப்போது எதிரே மேச்சேரியில் இருந்து இடைப்பாடி நோக்கி வந்த தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதினர். இதில், பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.