வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நிவாரண மையங்கள் அமைத்து தயார் நிலையில் இருக்க வேண்டும்

அரியலூர், செப். 9:  அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு முன்னெச்சரிக்கையாக பாதிக்கப்படும் இடங்களில் நிவாரண மையங்கள் அமைத்து தயார் நிலையில் இருக்க வேண்டுமென ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்பி அபிநவ்குமார் முன்னிலை வகித்தார். கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையின்போது நீர்நிலைகளால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணிக்கவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராம பகுதிகளையும் ஆய்வு செய்யவும் துணை கலெக்டர் தலைமையில் பல்துறை அலுவலர்களை கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையம் அமைத்து அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு பொதுவிநியோக திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்களை பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து போதுமான மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் பாம்பு மற்றும் விஷக்கடி மருந்துகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ஏரி மற்றும்  மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணி மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்த உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். பேரிடர் மீட்பு பணிக்காக வரும் தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு மற்றும் மத்தியக்குழுக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

மின்சார வாரியம் சார்பில் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.வடகிழக்கு பருவமழையின்போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இதைதொடர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஷ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தாசில்தார்கள் விக்டோரியா (பேரிடர் மேலாண்மை), முத்துலெட்சுமி (அரியலூர்) மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: