கம்பம் வட்டார கிராமங்களை புறக்கணிக்கும் நடமாடும் மருத்துவக்குழு

கம்பம், செப்.7:  தமிழகத்தில் ஒரு வட்டாரத்திற்கு ஒரு நடமாடும் மருத்துவக்குழு வீதம் மொத்தம் சுமார் 385 மருத்துவக்குழு வாகனங்கள் உள்ளன. இந்த வாகனத்தில் 1 டாக்டர், 1 செவிலியர், 1 டிரைவர் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகளை பராமரிக்கும்

வசதி, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தோல் நோய், காச நோய் ஆகியவற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், குடும்ப நல வாழ்வு குறித்த ஆலோசனைகள் மற்றும் சேவைகள், இ.சி.ஜி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த நடமாடும் மருத்துவக்குழுவினர் மாதம் தோறும் சம்பந்தப்பட்ட வட்டார பகுதியில் உள்ள கிராமப்புறங்களுக்கு நேரடியாக சென்று சுமார் 40 முகாம்கள் வரை நடத்த வேண்டும். மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு சிகிச்சை அளித்து தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும். கம்பம் சுற்று வட்டார பகுதிகளான காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி,  சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கூடலூர், லோயர்கேம்ப், பளியன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியை தலைமை இடமாக கொண்டு நடமாடும் மருத்துவக்குழு வாகனம் செயல்பட்டு வருகிறது.

இந்த வாகனம் காலை, மாலை நேரங்களில் மேற்கண்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று முறையாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இவர்கள் காலையில் செல்வதோடு சரி. மாலை நேரங்களில் பெரும்பாலான கிராமங்களை புறக்கணிப்பு செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் நடமாட முடியாத நிலையில் உள்ள நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆகவே மாவட்ட மருத்துவ நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து கிராமப்புறங்களில் முறையாக முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: